Thursday, December 29, 2011

கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடியே


ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பத்து மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். உலகில் வேறு எந்த பொருளையும் இவ்வளவு நேரம் நான் பார்த்து கொண்டிருந்ததேயில்லை. திரையை பார்த்து கொண்டும் படித்தும் கொண்டு இருப்பது அலுப்பதேயில்லை. என்ன வசீகரமது?

யாராவது ஒரு நாள் முழுவதும் கடலை பார்த்தபடியே இருந்திருக்கிறார்களா என்ன ? அல்லது ஒரு மலையை எட்டு மணி நேரம் இடைவிடாமல் பார்த்து கொண்டேயிருக்க முடிகிறதா, கொட்டும் மழையை கூட பத்து நிமிசங்களுக்கு மேல் ஆர்வமாக யாரும் பார்ப்பதேயில்லை. உலகின் பேரழகான அதிசயங்கள், பூக்களின் பள்ளத்தாக்குகள், பசுமைவெளிகள் கூட ஐந்து நிமிசத்தில் அலுத்து போய்விடுகிறது. குழந்தைகளை கூட இன்று எவரும் இப்படி உற்று பார்த்து கொண்டேயிருந்ததேயில்லை. பின் எப்படி கணிணி மட்டும் இப்படி ஈர்க்கிறது.

ஒரு செல்போன் விளம்பரம் ஒன்றில் காதில் போனை வைத்தபடியே நாளெல்லாம் பேசிப்பேசி தலை ஒருச்சாய்ந்து போன மனிதனை காட்டுவார்கள். அவன் எங்கே போனாலும் தலையை சாய்த்துக் கொண்டே பேசுவான். கணிணி முன் நாள் எல்லாம் இருப்பவர்கள் கிட்டதட்ட அப்படித் தானிருக்கிறோம்.

சில வேளைகளில் இந்த கணிணித் திரை ஒரு மாபெரும் கடற்கரை என்று தோன்றும். யார் யாரோ எதற்காகவே கடந்து போகிறார்கள். அமர்ந்திருக்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். ரகசியமாக திட்டமிடுகிறார்கள். சண்டையிடுகிறார்கள். குற்றம் புரிகிறார்கள். தியானம் செய்கிறார்கள். அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். உடற்பயிற்சி செய்கிறார்கள். அத்தனையும் ஒரே இடத்தில் சாத்தியமாகிறது.

சில வேளைகளில் இந்தத் திரை ஆசைகளின் ம்யூசியம் ஒன்றிற்குள் நுழைந்துவிட்டதை போல இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான ஆசைகள். கனவுகள், ரகசியங்கள், அதை அவரவர் அறைகளில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒளித்து வைத்து கண்டுபிடிக்க சொல்கிறார்கள். உலகின் ஆசைகள் ஒட்டுமொத்தமாக கணிணி வழியாகவே ஒருங்கிணைக்கபடுகின்றன. காட்சிபடுத்தபடுகின்றன.

சில நேரம் கணிணியின் திரை அழகான பெண்ணை பின்தொடர்வதை போல நம்மை மீறிய ஈர்ப்பில் அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. பின்னால் போவதன் மயக்கமே நம்மை கூட்டிப்போகிறது.

அரிதான வேளைகளில் அறியாத அடர்ந்த கானகம் ஒன்றினுள் செல்வதை போல பயம், வசீகரம் குழப்பம் திரும்பி போக முடியாதோ என்ற உள்ளுணர்வு, அதை தாண்டி காணும் வியப்பு, அறியாத மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், என்று வேறு உலகம் திறந்து கொள்கிறது.

கொலம்பஸ் நாடுகளை தேடி கடலில் அலைந்து திரிந்த பயணத்தை விடவும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடியே உலகை தேடும் பயணம் பெரியது தானோ.

வரங்கள்


மரங்கள் பூமிக்கு வரங்கள்..!

மரங்கள் நமக்கு தராதது என்று என்ன இருக்கிறது..?

மரங்களுக்காக நாம் என்ன கொடுத்து இருக்கிறோம்..?

கருவறை முதல் கல்லறை வரை மரங்கள் தான் சுமக்கின்றன.
ஆணி அடித்தாலும் சரி, தொட்டில் கட்டினாலும் சரி
மரங்கள் தோகையைத் தான் விரிக்கின்றன.

இடியானாலும், மின்னலானாலும், மழையானாலும், வெயிலானாலும், மனிதனுக்கு பொறுமையை கற்றுத்தருகின்றன.

மனிதன் கல்லை எறிந்தாலும், மரங்கள் மனிதனுக்கு மலர்களையே உதிர்க்கின்றன.
மாநாட்டுக்குள் எந்த மரங்களும் மார்தட்டிக்கொள்வது இல்லை தான்தான் உயர்ந்த ஜாதி என்று..!

எந்த மரமும் அடுத்த மரத்துக்கு எதிரியாய் இருந்தது இல்லை..!
மனிதனிடம் எத்தனை மிருகங்கள்..!

மரங்களிடம் மரங்கள் மட்டுமே இருக்கின்றன.
மனிதா! கொஞ்சம் கவனித்தாயா நீ மரங்களை வெட்டும் போதுகூட கிளைகள் உனக்கு சாமரம் வீசுவதை..!